திருநெல்வேலி மாவட்டத்தில் 2018-19ஆம் கல்வி ஆண்டில் அனைத்து
சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த
பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு இடங்களுக்கு இணையம் வழியாக விண்ணபிக்கலாம்
என நெல்லை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்காக இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1)(சி) இன் கீழ்
சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின்
குழந்தைகளைச்
சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் பொருட்டு
அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013-2014 ஆம் கல்வியாண்டு முதல்
வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில்
பயன்பெறும் வகையிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டும் ஏற்கனவே
வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் கீழ் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களும் கூடுதலாக அரசால்
வழங்கப்படுகிறது.
1. எதிர்வரும் 2018-2019ம் கல்வியாண்டிற்கு
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 431சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில்
(மெட்ரிக்/மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி) நுழைவுநிலை (எல்.கே.ஜி) வகுப்பில் 25% ஒதுக்கீட்டின் கீழ் 5469 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு
இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
2. இதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்
ஏற்படுத்தப்பட்டுள்ளது.பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான
விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவேற்றம்
செய்யப்பட்ட விவரம் பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் கைபேசி எண்ணிற்குக்
குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
3. முதன்மைக் கல்வி அலுவலர்/ மாவட்டக் கல்வி அலுவலர்/
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்/ மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்/உதவித்
தொடக்கக் கல்வி அலுவலர்/ வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில்
எவ்விதக்
கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
4. மாவட்டத்திலுள்ள அரசு இ-சேவை மையங்களை பதிவேற்றம்
செய்வற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள்
பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.
6. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ்
வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றவர் / எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர் /மூன்றாம்
பாலினத்தவர் /துப்பரவு தொழிலாளியின் குழந்தை / மாற்றுத் திறனாளிகள்
போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு
முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.
7. இணைய வழியாக பதிவு செய்வதற்கு பிறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் , இருப்பிடத்திற்கான ஆதாரச் சான்று ஆகிய சான்றிதழ்களுடன்
குழந்தைகளின் புகைப்படமும் கொண்டுவர வேண்டும்.
8. ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். மேற்காணும்
வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த
பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேரும்
வாய்ப்பினைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நெல்லை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் வீடியோவை பார்க்கவும்
No comments:
Post a Comment